தென்னிலங்கை அரசியலில் யார் பெரும்பான்மையை நிரூபிப்பதென்ற போட்டி நிலவி வரும் நிலையில், மைத்திரி-மஹிந்த அணிக்கு புதிய சிக்கல் சந்திரிகா குமாரதுங்க வடிவில் உருவாகியுள்ளது. மஹிந்தவை பிரதமராக்குவதை எதிர்க்கும் சந்திரிகா, அதிருப்தியாளர் அணியொன்றை திரட்டியுள்ளது, புதிய பிரதமர் தலைமையிலான அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
சந்திரிகா- மஹிந்த மோதல் நீண்ட வரலாறுடையது. இந்த மோதலாலேயே, 2015 ஆட்சி மாற்றத்தில் சந்திரிகா தீவிர பங்காற்றினார். மஹிந்த ராஜபக்சவை அப்போது வீழ்த்தியதில் சந்திரிகாவின் பங்கும் பெரியது.
2015இல் வீழ்ந்த மஹிந்த, 2018இல் அரசியலமைப்பிற்கு முரணாக பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதால பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐதேக அரசை ஆதரித்து வரும் நிலையில், அங்கிருந்து உறுப்பினர்களை இழுக்கும் முயற்சியில் மஹிந்த தரப்பு ஈடுபட்டு வருகிறது.
மறுபுறத்தில், சு.க முகாமிலிருந்து ஆட்களை இழுப்பதிலும், தமது முகாமிலிருந்து ஆட்கள் வெளியேறாமல் தக்கவைப்பதிலும் ஐ.தே.க தீவிரமாக முயன்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சந்திரிகா குமாரதுங்க இந்த விடயத்தில் சத்தமின்றி முக்கிய பாத்திரமொன்றை வகிக்கும் தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
சு.கவில் மஹிந்த தரப்பின் மீது அதிருப்தியுடைய, தனது ஆதரவாளர்களான சில எம்.பிக்களுடன் பேசி, அவர்களை வெளியேற்றும் முயற்சியை சந்திரிகா ஆரம்பித்தார். தற்போதைய நிலவரத்தின்படி துமிந்த திசநாயக்க, அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட சுமார் ஐந்து தொடக்கம் ஏழு எம்.பிக்கள் மைத்திரி கூடாரத்தை விட்டு வெளியேறி, ஐ.தே.கவை ஆதரிக்க தயாராகியுள்ளதாக தெரிகிறது.
இந்த எண்ணிக்கையில் எம்.பிக்கள் வெளியேறினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதென்பதை மஹிந்த தரப்பு உணர்ந்து கொண்டுள்ளது.
அர்ஜூன ரணதுங்க ஐ.தே.கவை ஆதரிக்க முடிவெடுத்ததன் எதிரொலியே, நேற்றைய அவரது கைது என்றும் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.