இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு, மட்டக்களப்பு மாநகர சபையில் சில உறுப்பினர்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சபை அமர்வின் இறுதியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் மூன்றாவது அமர்வின் முதலாவது விசேட அமர்வு, இன்று காலை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது.
மாநகரசபை கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர், மாநகரசபையின் உறுப்பினர் கே.தவராஜாவால், முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதற்கு மூன்று நிமிடங்களை வழங்குமாறு, சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர் வசந்தகுமார், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் சோமசுந்தரம், சுயேட்சைக்குழு உறுப்பினர் திலீப் உள்ளிட்ட சில உறுப்பினர்கள், கே.தவராஜ், சபை மரபுகளை மீறி செயற்படுவதாகத் தெரிவித்தனர்.
மாநகரசபை மேயர் உரையாற்றிய பின்னரே இவ்வாறான கோரிக்கைகளை விடுக்கமுடியுமென உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டிய நிலையில், சபை நடவடிக்கைகளின் நிறைவில் உறுப்பினர்களின் அனுமதியுடன், நினைவஞ்சலி செலுத்தலாம் என மாநகர மேயர் தெரிவித்தார்.
இதற்கமைய, சபை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்னதாக, இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.